இந்த இரவு என்னுடன் பேச மறுக்கிறது
இரவின் மொழிகளை அறிந்திடும் காதுகள்
என்னிடமிருந்தும் பேச மறுக்கிறது!
இவ்விரவின் ஊடே ஆகாயமும், விண்மீன்களும்,
பூமியும் எதுவுமே பேசவில்லை என்னிடம்!
நான் மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறேன்
என்னிடமே!
பேசுவதைக் கேட்டுக்கொண்டே
இரவு பேச மறுக்கிறது!
ஆழ்ந்து சிந்திக்கிறேன்
அன்பும், அதிசயமும் நிறைந்த
முகங்கள் வந்தாடுகிறது!
இருப்பினும் இரவின் இருளே என் முன் நின்றாடுகிறது
இரவே இப்படியுமா இருப்பாய்,
நீயே என் கவியாய் அமைகிறாய்!
இவ்வுலகில் நீயும் நானும் இருப்பது
நம் காதலின் மகிமையோ?
பின் ஏன் இந்த அமைதி – இரவே
பெருங்கூட்டத்தின் பேரிரைச்சலில் உன் குரல்
என் செவிகளில் விழ தவறவில்லை
ஒலி வந்த திசை நோக்கி ஓடிய தூரம்
நெடியது!
புரியாது போகாதே இரவே!
என்றேனும் ஒரு நாள் உன்னை நான்
சேர்வேன்!
அப்போது உனக்கும் எனக்குமான கூடலில்
உன் நெற்றியில் நான் வைக்கும் முத்தம்
நிலவாகிப் போகும்!
உன் மீது நான் பொழியும் அன்பு
நட்சத்திரங்கள் ஆகிப்போகும்!
நம் காதல் மிகப்பெரிய உண்மை இரவே!
நம் காதல் நித்தியமானது இரவே!
– குமரேசன் செல்வராஜ்